Saturday, January 18, 2025

இஸ்லாத்தின் பார்வையில் செயற்கை நுண்ணறிவு

 உலகமானது இன்று தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்ச கட்டத்தில் இயங்கி செல்கின்றது. இவ்வுலகில் வாழும் மனிதர்களாகிய நாமும் அத்தொழில்நுட்ப மாற்றங்களின் இசைவுகளோடு எம் அசைவுகளும் நகர்ந்து செல்வதில் பெருமிதம் கொண்டுள்ளோம். ஆனால் ஒரு வினாடி எம் அசைவுகளையும் எம்மையும் படைத்த இறைவனின் வழிகாட்டலின் பின்னணியில் இருந்து சற்று சிந்திப்போமா?

    இன்றைய உலகில் நம் அனைவரையும் வியப்படைந்து பார்க்க வைத்த தொழில்நுட்ப வளர்ச்சியின் மற்றுமொரு மைல்கல்லாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence -AI) விளங்குகின்றது. இச்செயற்கை நுண்ணறிவானது இஸ்லாமிய வழிகாட்டல்களுடன் எவ்வாறு ஒருங்கிணைந்து செல்ல வேண்டும் என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 செயற்கை நுண்ணறிவு என்பது இயந்திரங்களில் மனித நுண்ணறிவின் பிரதிபலிப்பாகும். இது கணினி அறிவியலின் ஒரு துறையாகும். இது மனிதர்களைப் போலவே தம் சுற்றுப்புறங்களை உணர்ந்து அதற்கேற்ப பதிலளிக்க கூடிய இயந்திரம் மற்றும் பயன்பாடுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றது. இருபத்தோராம் நூற்றாண்டில் மனிதனின் அன்றாட வாழ்வில் ஒரு முக்கியமான பகுதியாக செயற்கை நுண்ணறிவு மாற்றமடைந்து வருகின்றது.

   இஸ்லாம் என்பது ஒரு பூரண வழிகாட்டல் ஆகும். மனித வாழ்வுக்கு அவசியமான அனைத்து போதனைகளையும் அது உள்ளடக்கியுள்ளது.

 “இன்று நான் உங்களுக்கு உங்களது மார்க்கத்தை பூரணமாக்கி விட்டேன்; எனது அருட்கொடைகளையும் நிறைவு செய்து விட்டேன். உங்களுக்கு இஸ்லாத்தை மார்க்கமாக அங்கீகரித்து விட்டேன்.” (சூரா மாயிதா 5:3)

    இக் குர்ஆனிய வசனம் இதனை சான்றுப்படுத்துகின்றது. அந்த வகையில் இஸ்லாத்தின் பார்வையில் மனிதனானவன் அல்லாஹ்வின் பணியாளனாகவும் கலீபாவாகவும் கருதப்படுகிறான். இது பூமியை பாதுகாப்பதற்கும் மனிதநேயத்தை சிறப்பிக்கும் வகையிலும் செயற்படுவதை உறுதி செய்கின்றது. இஸ்லாமானது அறிவுக்கு உன்னத முக்கியத்துவத்தை வரலாற்றின் ஊடாக வழங்கியுள்ளது. இதனை எடுத்துக்காட்டும் விதமாக பின்வரும் ஹதீஸினை நோக்கலாம்.

“தான தர்மங்களில் சிறந்தது ஒரு முஸ்லிம் தானும் கற்று, பிறகு அதை தமது சகோதர முஸ்லிமுக்கு கற்றுக் கொடுப்பதாகும்.” (இப்னுமாஜா)

   அந்த வகையில் அறிவின் ஒரு வளர்ச்சி கட்டமாகவே செயற்கை நுண்ணறிவும் கருதப்படுகின்றது. செயற்கை நுண்ணறிவு தொடர்பில் நேரடியான குர்ஆனிய வசனங்கள் இல்லாவிடினும் அறிவு மற்றும்; தொழில்நுட்பம் குறித்த இஸ்லாமிய போதனைகளின் பின்னணியினூடாக செயற்கை நுண்ணறிவின் வகிபங்கை அறியமுடியும். சூரா அல் - ஜாதியா 45:13 வசனமானது பூமியின் வளங்களை பயன்படுத்த மனிதர்களை ஊக்குவிக்கிறது. இவ்வசனத்தை மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழினுட்ப மற்றும் புதிய கண்டிப்புகளை பயன்படுத்துவதற்கான ஒரு ஊன்றுகோலாக கொள்ளலாம்.

  இஸ்லாமிய போதனைகளில் செயற்கை நுண்ணறிவினை தடை செய்வதற்கான நேரடியான சான்றுகள் இல்லை. மனிதனால் உருவாக்கப்பட்ட கப்பல்கள் மற்றும் கவசங்கள் போன்ற பொருட்களை அல்லாஹ்வின் அருட்கொடையாகவும் அடையாளமாகவும் குறிப்பிடுகின்றது. இதே போல செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மற்றும் பிற மனித கடைப்பிடிப்புகளை மனித வாழ்வில் பல்வேறு அம்சங்களை நேர்மறையாக எளிதாக்கவும் மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட அருட்கொடையாக காணலாம். இந்த முன்னோக்கு மனித நலனுக்காக பூமியின் வளங்களை பயன்படுத்துவதற்கான குர்ஆனிய வசனத்துடனும் ஒருங்கிணைந்து செல்கிறது.

 குறிப்பாக அடிப்படை கடமைகளுடன் நேரடியாக தொடர்பில்லாத விடயங்களின் போது வெளிப்படையாக தடை செய்யப்படாவிடில் புதிய விடயங்கள் அனுமதிக்கப்படுகின்றன என்பது ஒரு கொள்கையாகும். இஸ்லாமிய அறிஞரான இப்னு தைமியா இக்கொள்கையை வலியுறுத்துகிறார். குறித்த விடயங்களுக்கு மாறாக குறிப்பிட்ட சான்றுகள் இல்லாவிடில் அனைத்தும் பொதுவாக அனுமதிக்கப்பட்டவை மற்றும் தூய்மையானவை என அவர் கூறுகிறார். இக்கோட்பாடு இஸ்லாமிய அறிஞர்களால் பல்வேறு புதிய பிரச்சினைகள் குறித்து தீர்ப்பு வழங்க பரவலாக பயன்படுகின்றது. ஆதலால் இக்கோட்பாட்டை செயற்கை நுண்ணறிவு தொடர்பிலும் அமுல்படுத்தலாம்.

    வரலாற்றில் இருந்தே பல்வேறு முஸ்லிம்கள் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பாரிய பங்களிப்பை மேற்கொண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக அல் ராசி மற்றும் அல் ஜஸாரி போன்றோரை குறிப்பிடலாம். ஒன்பதாம் நூற்றாண்டு அறிவியலாளர்கள் மற்றும் கணிதவியலாளர்கள் முதன்முதலாக நெறிப்பாட்டு முறைமையை (algorithm concept) கண்டுபிடித்தனர். அதுமட்டுமன்றி அண்மை காலத்திலும் முஸ்லிம் இளைஞர்களும் யுவதிகளும் செயற்கை நுண்ணறிவு துறையில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆதனை எடுத்துக்காட்டும் முகமாக பாகிஸ்தானின்; பட்டதாரியான அக்ஸா அஜ்மல் என்ற பெண் பார்வை குறைபாடுடையோருக்காக ஒரு தையல் இயந்திரத்தை (Pursewit) கண்டுபிடித்துள்ளார். இவற்றின் ஊடாக பார்க்கையில் நாம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்கான அனுமதி இஸ்லாமிய வழிகாட்டல்களினுடாக பெற முடிகின்றது.

    அடுத்து நாம் கவனிக்கத்தக்க விடயம் யாதெனில் இஸ்லாம் அனுமதி வழங்கியிருப்பினும் இச் செயற்கை நுண்ணறிவு தொழினுட்பத்தை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

    இஸ்லாமிய கொள்கைகளின் பின்னணியில் செயற்கை நுண்ணறிவின் அனுமதி என்பது குறிப்பிட்ட பயன்பாடு மற்றும் அது இஸ்லாமிய போதனைகளுடன் எவ்வாறு இணைகின்றது என்பதை பொருத்தாகும். செயற்கை நுண்ணறிவு தானாகவே இஸ்லாமிய கொள்கைகளுடன் இயல்பாக பொருந்தவோ பயன்படுத்தவோ இயலாது. இதற்கு நெறிமுறை மற்றும் தார்மீக சீரமைப்பை உறுதிப்படுத்தும் வகையிலான அணுகுமுறையை கையாள்வது அவசியம் ஆகும். இஸ்லாமிய போதனைகளின் படி புத்திசாலித்தனம் என்பது அல்லாஹ்வின் பரிசாவதோடு மனித குலத்தின் முன்னேற்றத்திற்காக அதை பயன்படுத்த வேண்டும். இருப்பினும் இஸ்லாமிய கொள்கைகளுடன் இணக்கமாக கருதப்படுவதற்கு செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் கடைபிடிக்க வேண்டிய சில வரம்புகள் மற்றும் நெறிமுறைகளின் எல்லைகள் உள்ளன.

    செயற்கை நுண்ணறிவு எப்பொழுதும் மனித நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் மற்றும் எந்த ஒரு எதிர்மறையான விளைவுகளையும் தவிர்க்க வேண்டும். இவை நீதி, நியாயம் மற்றும் சமத்துவத்தின் கொள்கைகளை மதிக்க வேண்டும். இனம், பாலினம், மதம் மற்றும் வேறு எந்த பண்புகளின் அடிப்படையிலும் பாகுபாடு காட்டக் கூடாது. செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் இந்த மதிப்புகளை அவர்களின் முடிவெடுக்கும் செயல்முறைகளில் பிரதிபலிக்க வேண்டும். அத்தோடு வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் மனித நலனை மேம்படுத்தவும் செயல்பட வேண்டும். தனிநபர்களின் தனி உரிமை மற்றும் தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்தல் என்பன இதில் அடங்குகின்றது. சுகாதாரம் கல்வி மற்றும் மனிதாபிமான முயற்சிகள் போன்ற நன்மை பயக்கும் நோக்கங்களுக்காக செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்துவது பொதுவாக அனுமதிக்கப்படுவதோடு எவ்வாறாயினும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட செயல்களை உள்ளடக்கிய நெறிமுறையற்ற நடத்தையை ஊக்குவித்தல் அடக்குமுறையை எளிதாக்கல் போன்றவை அனுமதிக்க முடியாதவை ஆகும்.

   இன்றைய சூழலில் இஸ்லாமிய மதிப்புகள் கலாச்சார விதிமுறைகளுடன் இணக்கமாக செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்குவது சவாலான ஒன்றாகும். செயற்கை நுண்ணறிவை மத மற்றும் கலாசார மதிப்புகளுடன் இணைப்பதன் மூலம் நாடுகள் மரபுகள் மற்றும் நம்பிக்கைகளை நிலை நிறுத்தும் வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை உறுதி செய்ய முடியும்.

    ஒட்டுமொத்தமாக நோக்கினால் இஸ்லாத்தில் அறிவை தேடுவதற்கான இறுதி இலக்கு பிரபஞ்சத்தில் இறைவன் இருப்பதற்கும் அவனின் சக்திக்கும் உள்ள அறிகுறிகளை அங்கீகரிப்பதாகும். அறிவையும் தொழில்நுட்பத்தையும் பின் தொடர்வது உள்ளார்ந்த மதிப்பு மிக்கது எனினும் அது நடைமுறை நோக்கங்களுக்கு உதவ வேண்டும். அந்த வகையில் இஸ்லாமிய கொள்கைகளுக்கு ஒருங்கிணைந்து செல்லும் வகையில் இஸ்லாத்தின் மதிப்பு மற்றும் நெறிமுறைகளை நிலைநிறுத்திக் கொண்டு சமூக முன்னேற்றத்திற்காக செயற்கை நுண்ணறிவை கையாள வேண்டும்.

Written By

H.I.F HAPSA
Faculty of Law (R), 2nd Year
University of Colombo


1 comment:

இஸ்லாம் கூறும் தாவரவியல் விஞ்ஞானம்

தாவரவியல் பற்றி அறிவியல் உண்மைகள் அல்குர்ஆனில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. இதில் பல விடயங்கள் விஞ்ஞான அடிப்படையில் கூறப்படுகின்றன. இங்கே...