அன்னை… இந்த வார்த்தை சொல்வதற்கே ஒரு புனிதம். உலகில் வாழும் எதுவும் அன்னையின் அன்பின் அளவை எட்ட முடியாத ஒன்றாகும். நபி முஹம்மது ﷺ அவர்கள் தாயின் பெருமையை அழுத்தமாக எடுத்துரைத்து கூறியுள்ளார்கள். ஒருமுறை ஒரு ஸஹாபி நபியவர்களிடம் வந்து, “யார் என் மீது மிகுதியான உரிமையுடையவர்?” என்று கேட்டார். நபி ﷺ அவர்கள் பதிலளித்ததாவது, “உன் தாய்.” மூன்று முறை இதே பதிலைத் தந்து, நான்காம் முறையே “உன் தந்தை” என்ற பதிலை அளித்தார். இவ்வகையில், தாயின் நிலையை இஸ்லாம் மூன்று மடங்கு உயர்த்திப் பார்க்கின்றது. இது வெறும் வார்த்தைகளால் அளக்க முடியாத, வாழ்வின் வேரில் பரந்திருக்கும் உணர்வாகும். ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் தொழுகையும் நோன்பையும் கடைப்பிடித்தாலும், தாயின் இதயத்தை புண்படுத்தினால், அல்லாஹ்வின் திருப்தியை இழப்பான். அவளது முகத்தில் சின்னஞ்சிறு சிரிப்பை உருவாக்கும் ஒரு செயல் கூட, ஒருவரை அல்லாஹ்வின் அருளுக்கு அருகாக அழைத்துச் செல்லும்.
இவ்வுலகில் எந்த அணுவும், தாயின் உள்ளம் போல் பரந்ததல்ல. ஒரு தாய் தனது குழந்தையை கருப்பையில் சுமக்கும் ஒவ்வொரு நாளும் தியாகத்தால் நிரம்பியவையாக இருக்கின்றன.புனித அல்குர்ஆன், தாயின் கருப்பையில் குழந்தையின் வளர்ச்சியை ஒரு அதிசயமாகக் குறிப்பிடுகிறது. அல்லாஹ் ஸுப்ஹானஹூ வ தஆலா கூறுகிறான்: “அவளது கருப்பையில் அவனை துன்பத்துடன் சுமந்தாள்; அவனை பிரசவிக்கவும் துன்பமுற்றாள்” (லுக்மான்: 14). ஒரு தாய் தனது உடல், உணர்வு, வாழ்நாள் அனைத்தையும் ஒரு பிள்ளைக்காக அர்ப்பணிக்கிறாள். அப்புனிதமான தியாகத்தை இஸ்லாம் பெருமைப்படுத்துகிறது. அவள் சுவாசம் குழந்தையின் உயிராகவே இழையோடுகிறது. அவளது கைகளைப் பிடித்தபடியே நாம் வாழ்வைப் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறோம். இஸ்லாம், இந்த உணர்வை வெறும் அடையாளம் அல்லாமல், ஒரு கடமையாக போற்றுகின்றது. தாயை நேசிக்கவும், அவரிடம் பாசமாகவும், பொறுமையாகவும், மரியாதையுடன் நடக்க வேண்டும் என்பதே ஒரு முஸ்லிமின் அடிப்படை பணியாகும். ஒரு பிள்ளை தவறினாலும், அந்த தவறை மன்னிக்கக் கூடியதும், திரும்ப அன்புடன் அணைத்துக்கொள்ளக்கூடியதும் அவள் மட்டுமே. ஒரு குழந்தையின் தவறுகளை பொறுத்து, திருத்தும் உளவியல் அதிசயம், தாயின் அன்பில் ஒளிந்திருக்கிறது.
தாய் ஒரு வீட்டின் தூணாக இருக்கிறாள். வீட்டு வேலைகள், பிள்ளைகள், குடும்ப பொறுப்புகள் என எல்லாவற்றிலும் தாயின் பங்கு ஒரு நிரந்தர அர்ப்பணிப்பாகவே இருக்கிறது. எந்த நிமிடமும் ஓய்வின்றி செயலாற்றும், எதிர்பார்ப்பின்றி செயல்படும் ஒரு மனிதர் யாரெனில், நிச்சயமாக அது தாய்தான். ஒரு தாய் குடும்பத்தில் மட்டுமல்லாமல், சமுதாயத்தில் தனக்கென்று ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறாள். இஸ்லாமிய சமூக கட்டமைப்பில், தாய்மார்கள் உண்மையான நெறிமுறைப் பரப்புவர்களாக கருதப்படுகின்றனர். ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க, தாயின் பங்களிப்பு மிக்க முக்கியமானது. அவள் வளர்க்கும் ஒரு நல்ல பிள்ளை, நாளைய நல்ல குடிமகனாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்கும்.
Written By
B S Amana
Faculty of Technology(R), 1st Year
University of Colombo.
No comments:
Post a Comment